Skip to main content

நம்மாழ்வார் சேர்க்கை சரிதை

நம்மாழ்வார்
     வைணவத்தை நாடு முழுவதும் சளைக்காமல் பறப்பிய 12 ஆழ்வார்களுள் நம்மாழ்வார் ஐந்தாம் இடத்தில் மிக முக்கியமாக விளங்கியவர். அவர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர்.   நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்று  புகழப்படுபவர். கம்பர் இயற்றிய "சடகோபர் அந்தாதி" எனும் நூலின் தலைவனும் இச்சடகோபனே ஆவார்.
திருநெல்வேலியில் தாமிரபரணிக்கரையிலுள்ள திருக்குருகூர் என்னும் ஊரில் வசித்த காரியார் மற்றும் உடைய நங்கைக்குத் திரு மகனாராக நம்மாழ்வார் அவதரித்தார். பதினாறு ஆண்டுகள் திருக்குருகூர் நம்பி கோவிலின் புளிய மரத்தின் அடியில் எவ்வித சலனமும் இல்லாமல் தவம் செய்து வந்தார். வடதிசை யாத்திரை மேற்கொண்டிருந்த மதுரகவி என்பவர் அயோத்தியில் இருந்தபோது தெற்குத் திசையில் ஒரு ஒளி தெரிவதைக் கண்டு அதனை அடைய தென்திசை நோக்கிப் பயணித்தார். மாறனிடமிருந்தே அவ்வொளி வருவதை அறிந்து அவரை சிறு கல் கொண்டு எறிந்து விழிக்க வைத்தார். சடகோபனின் ஞானத்தாலும், பக்தியாலும் கவரப்பெற்று அவருக்கே அடிமை செய்தார் என்பது வரலாறு. மாறன் கண்விழித்த உடன்  மதுரகவி ஆழ்வார் கேட்ட
"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" கேள்விக்கு
"அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதில் அளித்தார் நம்மாழ்வார். 
பன்னிறு ஆழ்வார்களிலும் இவரே மேலோங்கி நிற்பவர். இவர் நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் 1352 பாசுர்ங்களை அளித்தவர் ஆவார்.
கண்ணிநுண்சிறுத்தாம்பு, வைணவ சமயத்தில் நம்மாழ்வாரைப் போற்றி மதுரகவியாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும். இந்நூல் 11 தனியன்களைக் கொண்டது. மதுரகவியாழ்வாரால் நம்மாழ்வாரை வணங்கி பாடப்பட்ட இந்நூல் நாலாயிர திவ்யபிரபந்தம் தொகுப்பில் முதாலாயிரம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.  நம்மாழ்வாரையும் அவரை ஒத்தவர்களையும் ஒப்பிடும்போது, அவரின் எழுத்தின் நடையும் அழகும் நாடக வடிவில் அமைக்கப்பட்டிருப்பதால், இவர் மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்கின்றார்.
கலியுகத்தில் வைகுண்ட வாசல் முதன்முறையாக நம்மாழ்வாருக்கே ஸ்ரீமன் நாராயணால் திறக்கப் பட்டது என்று நம்ப படுகிறது. 
பகல் பத்தும் இரா பத்தும் மார்கழி மாதம் கொண்டாடப் படுகிறது.  இரா பத்தின் முதல் நாள் “வைகுண்ட ஏகாதசி” ஆகும்.  அன்றுதான் நம்மாழ்வார் சொர்கவாசல் அடைந்தார் என்றும் நம்பப் படுகிறது.  ஒவ்வொரு வருடமும் இந்த வைபவம் நாடகமாக கோவில்களில் கொண்டாடப் படுகின்றது. 
இந்த வருடம் நான் சென்னை லஷ்மிபுரம் (ம்யூசிக் அகாடமியின் பின்புரம் உள்ளது) ஸ்‌ரீனிவாச பெருமாள் கோவிலுக்கு சென்றிருந்தபோது அந்த காட்சியை காணும் பேறு பெற்றேன். ரா பத்தின் கடைசி நாள் நம்மாழ்வாருக்கு மோக்ஷம் கிட்டியது என்று புராணம்.  அப்போது, பக்தர்கள் யாவரும் வேண்டி கேட்டதின் பொருட்டு, ஸ்ரீமன் நாராயணன் நம்மாழ்வாரை திரும்பி பூலோகத்திற்கு அனுப்பினார் என்றும் பூர்வீக நூல்கள் கூறுகின்றன. 
இந்த கோவில் ஒரு தனி குடும்பத்தினரால் பரம்பரை பரம்பரையாக நிர்வகிக்கப் பட்டு வருகின்றது.  இதனை சீருடனும் சிறப்புடனும்  நிர்வகிக்கும் மூன்றாவது பரம்பரை ட்ரஸ்டீயின் பெயர் திரு. ராஜப்பா. இவர் 82 வயதை நெருங்கும் ஒர் வழக்கறிஞர் ஆவார். இவர் மிருதங்கமும் வாசிக்கும் சிறப்புடையவர்.  கோவில் கைங்கரியங்களை கண்ணும் கருத்துமாக மேற்பார்வை இடுபவரும் இவரே.  பகவத் கைங்கரியங்களில் மிகவும் கண்டிப்புடனும் விழிப்புடனும் கடந்த ஐம்பது வருடங்களாக இக்கோவிலை வழி நடத்தி வருபவர்.
இந்த விழாவிற்காக பாயென கோலமிட்டு கோவிலை அலங்கரித்திருந்தனர்.  இக்கோவிலின் அழகே எங்கும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதுதான். 

ஆண்களும் பெண்டிருமாக ஒன்று சேர்ந்து இரு வரிசையாக நின்று நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை இனிமையாக பாட, நம்மாழ்வாரின் சிலையுருவம் ஒரு புறமும் பெருமாள் மற்றும் உபய நாச்சியார்கள் மறுபுறமும் வீற்றிருந்தனர்.
 நடுவில் வெள்ளை பாய் விரித்து, வாசனை மலர்கள் தூவி நடையை அழகு படுத்தியிருந்தனர்.
  கம்பீரமாக நாலாயிர திவ்ய பிரபந்தம் ஒலிக்க, பரத் மற்றும் ரவிச்சந்திரன் (கோவில் பட்டர்கள்) நம்மாழ்வாரை பய பக்தியுடன் ஏந்தி ஒய்யாளி என ஆடி ஆடி பெருமாளை நோக்கி முன்னேரினர். 
எங்கள் யாவரின் கண்களும் நாம்மாழ்வாரையும் பெருமாளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தன. மெல்ல மெல்ல நம்மாழ்வார் ரங்கனை அடைந்து வைகுண்டம் ஈன்றார்.  இதை அழகாக சித்தரித்து நம்மாழ்வாரின் சிலா ரூபத்தை ரங்கனின் பாதத்தில் அமர்த்தி திருத்துளாவினால் மூடினர்.
  அப்போது, பக்தர்கள் யாவரும் ரங்கனிடம் நம்மாழ்வாரைத் தங்களுக்கு திரும்பி ஆழ்வாராக வேண்டி யாசிக்க, “தந்தேன் !! தந்தேன்!!” என்று பெருமாள் கூறியதாக ஏற்று நம்மாழ்வார் திருத்துளா புதையலிலிருந்து வெளி கொணரப் பட்டார்.  மீண்டும் ஒய்யாளி ஆடி நம்மாழ்வார் பெருமாளை பார்த்தபடியே திரும்பி தன் இடம் சென்று அமர்கின்றார். 
இந்த வைபவத்தின் முக்கியதுவத்தையும் அழகையும் திறம்பட சித்தரித்தவர்கள் அங்கு குழுமியிருந்த ஆண்களும் பெண்டிரும்.  சுமார் இருபது ஆண்கள் ஒரு வரிசையாகவும் இருபது பெண்கள் ஒரு வரிசையாகவும் நின்று நாலாயிர திவ்ய பிரபந்தத்தை பாசுரம் பாசுரமாக பாடியது இப்பொழுதும் என் நினைவில் நிற்கின்றது. 

என்னே ஒர் பக்தி, என்னே ஒர் உருக்கம், என்னே ஒர் ஆன்மீக ஒழுக்கம் !!!! நம்மாழ்வார் சென்று இறைவனடி அடைந்ததும் அனைவரின் கண்களும் கலங்கின.  அவர் திரும்பி பூலோகம் அடைந்ததும் அனைவரும் ஆர்பரித்து மகிழ்ந்தனர்.  உண்மையாகவே, நம்மாழ்வார் சேர்க்கை இன்றுதான் நடக்கிறதோ என்ற எண்ணம் மேலோங்கி நின்றது. 
கோவிலை அலங்கரிக்க அவர்கள் இழைத்திருந்த கோலங்கள் கண்ணை பறித்தன.  மலர் மற்றும் விளக்கு அலங்காரமோ சொர்கபுரி என கோவிலை மாற்றி இருந்தன.

  இவை யாவையும் தாண்டி, ஆண்களும் பெண்டிருமாக அவர்களின் நெறியான நடத்தலும், யாவரையும் சந்தோஷிக்க செய்யும் அணுகுமுறையும் பார்ப்பவர்கள் மனதில் பரவசத்தை ஏற்படுத்தின.  நான் பெண்ணாக இருப்பதாலோ என்னவோ, இங்கு நான் லஷ்மி, ஜெயந்தி மற்றும் பத்மப்ரியா ஆகிய பெண்டிரின் பெயர்களை முக்கியமாக குறிப்பிடுகின்றேன்.  பம்பரமாக அவர்கள் சுழன்ற வேகமும், ஒவ்வொரு வேலையையும் அவர்கள் நிறைவேற்றிய நேர்த்தியான விதத்தையும் இங்கு நான் குறிப்பிட கடமை பட்டிருக்கின்றேன்.
இதை எல்லாம் தாண்டி, எந்த இறை பணியிலும் அவர்கள் யாவரும் எந்த சமரசமும் செய்யாமல் இருப்பதுதான் என் கவனத்தை ஈர்த்தது.  ஆன்மீகப் பணிகளில் ஒரு “லஷ்மன ரேகையை” வரைந்து, அதை மீறாமல் அவர்கள் தங்கள் வேலைகளில் முற்பட்டது மிகவும் மனத்தெம்பையும் சந்தோஷத்தையும் அளித்தது.
இதற்கு பின்னர், யாவருக்கும் வயிறு புடைக்க கேசரியும் (அதில் முந்திரியும் திராட்ஷையும் போட்டி போட்டுக் கொண்டிருந்தன), அக்காரவடிசலும், புளியோதரையும் தயிர் சாதமும் பிரசாதமாக வினியோகிக்கப் பட்டன. 
முடிவில் இந்த ஆன்மீக வைபவம் செவ்வெனே முடிந்து, வீடு திரும்பும்போது, ஒர் நல்ல மாலைபொழுதை கழித்த மகிழ்ச்சியும், அதே சமயம் “ஐயோ, முடிந்து விட்டதே” என்ற ஏக்கமும் மாறி மாறி மனதில் குடி கொண்டன. 
“எங்கும் திரிந்து ரங்கனை சேவி” என்ற வாக்கியத்திற்கேற்ப ஒரு உன்னதமான சேவையை அனுபவித்து கடைசியாக, இக்கட்டுரையை முடிக்கும் முன், என் மனமார்ந்த நன்றியை இங்கோவில் ட்ரஸ்டீ அவர்களுக்கும் அங்கு திறம்பட கோவில் நிற்வாகத்தில் துணையாக நிற்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Comments

  1. எங்கும் திரிந்து ரங்கனை சேவி” என்ற வாக்கியத்திற்கேற்ப ஒரு உன்னதமான சேவையை அனுபவித்து அதையும் கட்டுரையாக எங்களுக்கு அளித்தமைக்கு மிக்க நன்றி. மிகவும் சிறப்பாகவும் எளிமையாகவும் எங்களுக்கு நம்மாழ்வாரின் கதையை எடுத்துரைத்த மைக்கும் நன்றி..அருமையான புகைப்படங்கள் சிறந்த கட்டுரை .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

CORONA VIRUS AND CHINA'S REBOUNDING CAPACITY

CORONA VIRUS AND CHINA’S REBOUNDING CAPACITY            Corona viruses (CoV) are a large family of viruses causing illnesses ranging from the common cold to really severe diseases like the Middle East Respiratory Syndrome (MERS-CoV) and Severe Acute Respiratory Syndrome (SARS-CoV).   This novel corona virus (nCoV) is a new train that has not been previously identified in humans.           They are zoonatic literally translating that they are transmitted between animals and humans.   Investigations revealed that SARS-CoV was transmitted from civet cats to humans and MERS-CoV from dromedary camels to humans.   There are several other known corona viruses that are circulating in animals but that have not yet infected humans.   Common signs of infection to watch out for are respiratory symptoms, fever, cough, shortness of breath and breathing difficulties. In more s...
வல்லி மாமி.  ஒவ்வொரு வெண்டைக்காயும், கத்தரிக்காயும், முறுங்கைக்காயும் ஒரு தனி கதை சொல்கின்றது.  அவர்கள் சமைக்கும் விதம் நம்மை வெட்கத்தில் ஆழ்த்துகின்றது.  நாம் எல்லாவற்றையும் அதிகப் படுத்துகின்றோமோ என்று எண்ண வைக்கின்றது.  அவர்கள் பரிமாரும் நபர்களை பார்க்கும்போது கண் கலங்குகின்றது.  share  செய்ததற்கு மிக்க நன்றி.  ரமா ஸ்‌ரீனிவாசன்.

A WOMAN BORN TO RULE - DR. SASHIKALA GURPUR

A WOMAN BORN TO RULE - DR. SASHIKALA GURPUR The strength of a woman is not measured by the impact that all her hardships in life have had on her; but the strength of a woman is measured by the extent of her refusal to allow those hardships to dictate her and who she becomes.   - C. JoyBell C And did she prove this quote right ? YES and that successful woman is Dr. Sashikala Gurpur. Dr. Sashikala Gurpur graduated in law from Mangalore University in 1988.   She is currently reigning supreme as the Director of Symbiosis Law School, Pune and Dean of Faculty of Law, Symbiosis International University.   She is the proud recipient of the Prestigious Fulbright Fellowship as also the Legal Education Innovation Award of SILF-MILAT in 2011 Scholar.   These are only two from the numerous prestigious awards and honors she has had in her career, so far and way to go! Dr. Gurpur has been a winner of many distinctions and awards throughout her law studies. Today, she...